
கூண்டு – இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்
ஆசிரியர்: கார்டன் வைஸ் – வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் – விலை ரூ.250
போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97
கூண்டு – இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்
- ருத்ரன். தினமலர் 29.04.2012.
இலங்கை தமிழரின் சுயாட்சி நிர்ணய போராட்டம் குறித்து, பலர் பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ளனர். ஆனால் கார்டன் வைசின் இந்த நூல் மிக முக்கியமான காலகட்டத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த 2007 – 2009 வரையிலான காலகட்டத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஐ.நா. சார்பில் பணியாற்றிய கார்டன் வைஸ், இறுதிப் போரின்போது நிகழ்ந்த கொடூரங்களை மிக விரிவாகவே எடுத்துரைக்கிறார். இறுதிகட்டப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்ட முள்ளிவாய்க்கால் பகுதியைத்தான் வைஸ் சித்திரிக்கிறார்.
இலங்கையில் சிங்கள இனவாதம் தோன்றிய காலம் மற்றும் அதற்கான காரணத்தில் இருந்து இந்நூலை துவக்குகிறார் வைஸ்.
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப்பின் பயங்கரவாதமும், உரிமைப் போராட்டங்களும் எவ்வாறு ஒன்றாகப் பார்க்கப்பட்டன என்பதையும் எடுத்துரைக்கிறார்.
இந்தப் பின்னணியைப் புரிந்து கொள்ளாதது அல்லது புரிந்து கொள்ள மறுத்ததுதான் விடுதலைப் புலிகளின் முதல் வீழ்ச்சி எனத் தெளிவாக கூறுகிறார். விடுதலைப் புலிகளைவிட இலங்கை அரசே மிக மோசமான மனிதப் படுகொலையில் இறங்கியது என ஆதாரங்களுடன் குற்றம்சாட்டுகிறார். போர்க் குற்றங்களுக்கு அதிபர் ராஜபக்ஷே மற்றும் அவரது தம்பியும் ராணுவச் செயலருமான கோத்தபய ராஜபக்ஷே ஆகியோர்தான் மூலகாரணம் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
மொழிபெயர்ப்பு, மூல நூலைப் படிக்கும் உணர்வை அளிக்கிறது. ஆற்றொழுக்கான நடை. காலச்சுவடு பதிப்பகம் பாராட்டற்குரியது.
—- —- —-
கூண்டு
- புத்தகன், ஜுனியர் விகடன் 19.02.2012.
தமிழன் பட்ட துயரை இதுவரை தமிழனே சொல்லிச் சொல்லி அழும் நேரத்தில் ஓர் ஐரோப்பியக் குரல்… கார்டன் வைஸிடம் இருந்து எழுகிறது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் சிக்கி இறப்பதைப்பற்றிக் கவலைப்படாமல், ஆக்ரோஷமாகப் போரை நடத்துவது என்று முடிவு செய்தது யார்? பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கொலை செய்துதான் விடுதலைப் புலிகளை வென்றிருக்க முடியுமா? நம்மைப் பதைபதைக்கவைத்த அந்த அழித்தொழிப்பு… இலங்கையில் நிலவிய சூழலால், தவிர்க்க முடியாது மேற்கொள்ளப்பட்ட போர்த்தந்திரங்களின் விளைவு அல்ல. இலங்கையின் விடுதலைக்குப்பின் அமைந்த அரசுகள், தமிழ்ச் சிறுபான்மையினரை, தொடர்ந்து எதிரிகளாகப் பாவித்து, மனிதநேயத்துக்கு முரணான பாதையில் பயணித்ததன் விளைவுதான், 2009ல் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தக் கொடுமைகள் – என்று எழுதுவதன் மூலமாக ஈழத்தில் நடந்தது விடுதலைப் புலிகளை வீழ்த்துவதற்கான யுத்தம் அல்ல, மொத்தத் தமிழ் இனத்தையும் கருவறுப்பதற்கான இன அழிப்பு என்பதை ஒப்புக்கொள்கிறார் கார்டன் வைஸ்.
இந்தக் கொடுங்கோன்மை நடந்த 2007-2009 ஆண்டுகள் வரை இலங்கையில் ஐ.நா. சபை செய்தித் தொடர்பாளராக இருந்ததால், அவரது பார்வைக்குப் பல தகவல்கள் நேரடியாக வந்து சேர்ந்தன. மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும் நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களையும் செயற்கைக்கோள் புகைப்படங்களையும் சேகரித்த நான்கு பேரில் இவரும் ஒருவர், இவற்றை வெளியிட்டதற்காக இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளான கார்டன் வைஸ், இப்போது ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் தறையில் பணியில் இருக்கிறார். ஐ.நா. பொறுப்பில் இருந்த காலத்தில் கள நிலவரங்களை வைத்து எழுதப்பட்டுள்ளதால், இந்தப் புத்தகத்தின் பல பக்கங்களில் மரண ஓலம் கேட்கிறது. ரத்த வாடை வீசுகிறது. அப்பாவிகளை சுட்டுக் கொல்வதற்கு எதிரான கோபக் குரலை கார்டன் வைஸிடம் இருந்து அதிகமாகவே கேட்க முடிகிறது. ஐ.நா. சபையின் மௌனத்துக்கு ஒரு சாட்சியாக இந்தப் புத்தகம் இருக்கிறது.
உலக நாடுகள் அனைத்துமே பிரபாகரனை ஒரு ‘பயங்கரமாக’ப் பார்க்கக் காரணம் அவர் விமானப் படையை வைத்திருந்ததுதான் என்ற துல்லியமான பார்வையை முன்வைக்கும் கார்டன் வைஸிடம் இருந்து பிரபாகரன் மர்மம் குறித்தும் தெளிவான பதில் இல்லாதது ஆச்சர்யம்தான். நந்திக்கடல் பகுதியில் கடைசி நேரத்தில் இருந்த சிங்கள வீரர்களுடன் பேசியதாகச் சொல்லும் இவர், பிரபாகரன் ‘இறப்பு’ தொடர்பாக நான்கு விதமான சம்பவங்களை வர்ணிக்கிறார்.
‘பிரபாகரனின் முடிவு குறித்து அரசு கூறும் எதையுமே நம்புவதற்கு இல்லை. நேரத்திற்கொன்று சொன்னார்கள். அவை முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. அந்த நேரத்தில் களத்தில் என்ன நடந்தது என்று தெரியவந்த நிகழ்வுகளுடன் அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் பொருந்தவே இல்லை. சற்றே திறந்தமேனியாகவும் நிர்வாணமாகவும்கூடப் பிரபாகரன் வீழ்ந்து கிடப்பதாக வேறு சில புகைப்படங்களும் அடுத்து சில நாட்களில் வெளியாயின. அவை திரிக்கப்படாத, உண்மையான புகைப்படங்கள் என்று கூற முடியாது’ என்கிறார் வைஸ்.
இந்தப் புத்தகம் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பது கார்டன் வைஸின் விருப்பம்!
நேரில் புத்தகம் வாங்க:
Dial For Books
Chain Of Book Shops
G-5, Narayana Apartments, 23, Rameshwaram Road, T.Nagar, Chennai – 17.

ஆன்லைனில் புத்தகம் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-196-6.html
போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97




