Dial for books
May 7th, 2012

கூண்டு – இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்

koondu

கூண்டு – இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்

ஆசிரியர்: கார்டன் வைஸ் – வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் – விலை ரூ.250

போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97

கூண்டு – இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்

- ருத்ரன். தினமலர் 29.04.2012.

இலங்கை தமிழரின் சுயாட்சி நிர்ணய போராட்டம் குறித்து, பலர் பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ளனர். ஆனால் கார்டன் வைசின் இந்த நூல் மிக முக்கியமான காலகட்டத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த 2007 – 2009 வரையிலான காலகட்டத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஐ.நா. சார்பில் பணியாற்றிய கார்டன் வைஸ், இறுதிப் போரின்போது நிகழ்ந்த கொடூரங்களை மிக விரிவாகவே எடுத்துரைக்கிறார். இறுதிகட்டப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்ட முள்ளிவாய்க்கால் பகுதியைத்தான் வைஸ் சித்திரிக்கிறார்.
இலங்கையில் சிங்கள இனவாதம் தோன்றிய காலம் மற்றும் அதற்கான காரணத்தில் இருந்து இந்நூலை துவக்குகிறார் வைஸ்.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப்பின் பயங்கரவாதமும், உரிமைப் போராட்டங்களும் எவ்வாறு ஒன்றாகப் பார்க்கப்பட்டன என்பதையும் எடுத்துரைக்கிறார்.

இந்தப் பின்னணியைப் புரிந்து கொள்ளாதது அல்லது புரிந்து கொள்ள மறுத்ததுதான் விடுதலைப் புலிகளின் முதல் வீழ்ச்சி எனத் தெளிவாக கூறுகிறார். விடுதலைப் புலிகளைவிட இலங்கை அரசே மிக மோசமான மனிதப் படுகொலையில் இறங்கியது என ஆதாரங்களுடன் குற்றம்சாட்டுகிறார். போர்க் குற்றங்களுக்கு அதிபர் ராஜபக்ஷே மற்றும் அவரது தம்பியும் ராணுவச் செயலருமான கோத்தபய ராஜபக்ஷே ஆகியோர்தான் மூலகாரணம் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மொழிபெயர்ப்பு, மூல நூலைப் படிக்கும் உணர்வை அளிக்கிறது. ஆற்றொழுக்கான நடை. காலச்சுவடு பதிப்பகம் பாராட்டற்குரியது.

—-     —-    —-

கூண்டு

- புத்தகன்,  ஜுனியர் விகடன் 19.02.2012.

தமிழன் பட்ட துயரை இதுவரை தமிழனே சொல்லிச் சொல்லி அழும் நேரத்தில் ஓர் ஐரோப்பியக் குரல்… கார்டன் வைஸிடம் இருந்து எழுகிறது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் சிக்கி இறப்பதைப்பற்றிக் கவலைப்படாமல், ஆக்ரோஷமாகப் போரை நடத்துவது என்று முடிவு செய்தது யார்? பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கொலை செய்துதான் விடுதலைப் புலிகளை வென்றிருக்க முடியுமா? நம்மைப் பதைபதைக்கவைத்த அந்த அழித்தொழிப்பு… இலங்கையில் நிலவிய சூழலால், தவிர்க்க முடியாது மேற்கொள்ளப்பட்ட போர்த்தந்திரங்களின் விளைவு அல்ல. இலங்கையின் விடுதலைக்குப்பின் அமைந்த அரசுகள், தமிழ்ச் சிறுபான்மையினரை, தொடர்ந்து எதிரிகளாகப் பாவித்து, மனிதநேயத்துக்கு முரணான பாதையில் பயணித்ததன் விளைவுதான், 2009ல் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தக் கொடுமைகள் – என்று எழுதுவதன் மூலமாக ஈழத்தில் நடந்தது விடுதலைப் புலிகளை வீழ்த்துவதற்கான யுத்தம் அல்ல, மொத்தத் தமிழ் இனத்தையும் கருவறுப்பதற்கான இன அழிப்பு என்பதை ஒப்புக்கொள்கிறார் கார்டன் வைஸ்.

இந்தக் கொடுங்கோன்மை நடந்த 2007-2009 ஆண்டுகள் வரை இலங்கையில் ஐ.நா. சபை செய்தித் தொடர்பாளராக இருந்ததால், அவரது பார்வைக்குப் பல தகவல்கள் நேரடியாக வந்து சேர்ந்தன. மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும் நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களையும் செயற்கைக்கோள் புகைப்படங்களையும் சேகரித்த நான்கு பேரில் இவரும் ஒருவர், இவற்றை வெளியிட்டதற்காக இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளான கார்டன் வைஸ், இப்போது ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் தறையில் பணியில் இருக்கிறார். ஐ.நா. பொறுப்பில் இருந்த காலத்தில் கள நிலவரங்களை வைத்து எழுதப்பட்டுள்ளதால், இந்தப் புத்தகத்தின் பல பக்கங்களில் மரண ஓலம் கேட்கிறது. ரத்த வாடை வீசுகிறது. அப்பாவிகளை சுட்டுக் கொல்வதற்கு எதிரான கோபக் குரலை கார்டன் வைஸிடம் இருந்து அதிகமாகவே கேட்க முடிகிறது. ஐ.நா. சபையின் மௌனத்துக்கு ஒரு சாட்சியாக இந்தப் புத்தகம் இருக்கிறது.

உலக நாடுகள் அனைத்துமே பிரபாகரனை ஒரு ‘பயங்கரமாக’ப் பார்க்கக் காரணம் அவர் விமானப் படையை வைத்திருந்ததுதான் என்ற துல்லியமான பார்வையை முன்வைக்கும் கார்டன் வைஸிடம் இருந்து பிரபாகரன் மர்மம் குறித்தும் தெளிவான பதில் இல்லாதது ஆச்சர்யம்தான். நந்திக்கடல் பகுதியில் கடைசி நேரத்தில் இருந்த சிங்கள வீரர்களுடன் பேசியதாகச் சொல்லும் இவர், பிரபாகரன் ‘இறப்பு’ தொடர்பாக நான்கு விதமான சம்பவங்களை வர்ணிக்கிறார்.

‘பிரபாகரனின் முடிவு குறித்து அரசு கூறும் எதையுமே நம்புவதற்கு இல்லை. நேரத்திற்கொன்று சொன்னார்கள். அவை முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. அந்த நேரத்தில் களத்தில் என்ன நடந்தது என்று தெரியவந்த நிகழ்வுகளுடன் அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் பொருந்தவே இல்லை. சற்றே திறந்தமேனியாகவும் நிர்வாணமாகவும்கூடப் பிரபாகரன் வீழ்ந்து கிடப்பதாக வேறு சில புகைப்படங்களும் அடுத்து சில நாட்களில் வெளியாயின. அவை திரிக்கப்படாத, உண்மையான புகைப்படங்கள் என்று கூற முடியாது’ என்கிறார் வைஸ்.

இந்தப் புத்தகம் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பது கார்டன் வைஸின் விருப்பம்!

நேரில் புத்தகம் வாங்க:

Dial For Books

Chain Of Book Shops

G-5, Narayana Apartments, 23, Rameshwaram Road, T.Nagar, Chennai – 17.

DFB Books Shop Map

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்லைனில் புத்தகம் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-196-6.html

போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97

April 12th, 2012

இந்தியப் பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு

978-81-8493-038-2_b

இந்தியப் பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு

ஆசிரியர்: மருதன், வெளியீடு: கிழக்கு பதிப்பகம், விலை ரூ. 105

போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97

“இந்தியப் பிரிவினை” – உதிரத்தால் ஒரு கோடு – இந்திய பாகிஸ்தான் பிரிவினையையும் அதன் விளைவுகளையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இந்த நூல் வெறும் வாசிப்புக்காக மட்டுமல்ல, நம் வரலாற்றையும் அறிந்துகொள்ள உதவும். பல்வேறு ஆதாரங்களின் பொக்கிஷமான இந்த நூலை 21 துணை தலைப்புகளில் விவரிக்கிறார் ஆசிரியர் மருதன்.

எந்தவொரு பொருளாதாரக் காரணங்களோ, இயற்கை நியதிகளோ, மொத்தமான கலாசார காரணங்களோ, இல்லாமல் மதவெறி என்ற பேயால் இந்த இரு தேசங்களும் தூண்டப்பட்டன என்பதைப் படம் பிடித்துக்காட்டுகிறது. ஒரு ரயில் முழுவதும் பிணங்களில் தொடங்குகிறது அத்தியாயம். தொலைந்து போன தன மகனைத் தேடி பாகிஸ்தானிலிருந்து பலமுறை இந்தியா வந்து தேடுதல் பலனின்றி இறுதியில் பாகிஸ்தான் உளவாளி என்ற குற்றத்துடன் சிறையிலிருக்கும் தந்தையைப் பற்றிய எழுத்துக்களுடன் முடியும் அத்தியாயம் நமது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் போரிட்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால், இரு தேசங்களும் இன்னமும் வளமையாக இருந்திருக்கலாம் என்ற ஏக்கம் உண்மையானதே. மதம் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இரு தேசங்களும் பிரிந்திருக்காது என்பது எவ்வளவு நிச்சயமான உண்மை. எத்தனையோ உயிர்கள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பாகுபாடின்றி கொல்லப்பட்டு, நண்பர்களாகப் பழகியவர்கள், உடன் பணி புரிந்தவர்கள் மனித நேயத்தை மறந்து மத வெறியில் பழிதீர்த்து இருப்பது இந்த புத்தகம் முழுவதும் தெரிகிறது.

எத்தனை பிரச்சனைகளை கையாண்டு இந்த சுதந்திரம் கிடைத்திருக்கிறது? எத்தனை உயிர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கிறது? இந்த நிகழ்வுகள் யாவும் உலக நாடுகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்ற கவலை நியாயமானதும் கூட. அரசியல் பிரச்சினைகளையும், காங்கிரஸ் மற்றும் இந்துத்துவா கொள்கைகளையும் விலாவாரியாக விவரிக்கும் இந்நூல் முஸ்லிம் லீகின் அழுத்தமான தீவிரமான போக்கினையும் விவரிக்க தவறவில்லை.

சுதந்திரப் போராட்டத்தில் ஒவ்வொரு தலைவர்களின் அணுகுமுறையையும் முன்னோக்கி சென்ற பாங்கையும் தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர். ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், மவுண்ட் பட்டேன், முஹம்மத் இக்பால், சவர்க்கார் போன்றோரின் அணுகுமுறையையும் மேலும் இந்திய தேசிய காங்கிரஸ், ஹிந்து மஹா சபை, முஸ்லிம் லீக் ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகளும் புத்தகம் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளன.

மன்னராட்சி முறையைத் தகர்த்து ஒட்டுமொத்த இந்தியாவாக மாற்றியது மற்றும் போர்ச்சுகலின் பிடியிலிருந்து கோவாவை மீட்டு எடுத்தது, இந்தியா – பாகிஸ்தான் ஜம்மு காஷ்மிருக்காக போரிட்டது போன்ற எல்லா நிகழ்வுகளையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறார் இந்நூல் ஆசிரியர்.

அதிகாரம் கை மாற்றபடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. எத்தனை மதி நுட்பமும் தெளிவும் அபாரமான ஆளுமையும் கொண்டிருந்தால் மட்டுமே இத்தனை பெரிய தேசத்தை நிர்வகிக்க முடியும். இதில் நமது தலைவர்கள் எப்படிக் கையாண்டனர் என்பதைப் படிபடியாக உண்மை சம்பவங்களுடன் விவரிக்கிறார்.

பிரிவினை குறித்து மகாத்மா காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்வி-பதில் தொகுப்பினையும் “கேள்விகள்” என்ற அத்தியாயத்தில் இணைத்திருக்கிறார். இதில் மகாத்மாவின் மனநிலை படிப்பவர்களுக்கு தெளிவாகப் புரிகிறது. மேலும் பின்னிணைப்புகளாக உள்ள மூன்று பகுதிகளும் மாணவர்களுக்கும், வரலாற்று பதிவர்களுக்கும் ஏற்ற ஒரு கருத்துப் பெட்டகமாக உள்ளன.

நம் ஒவ்வொருவருக்கும் பிரிவினை பற்றிய அபிப்பிராயங்கள் மாறுபட்டாலும் இந்த சுதந்திர இந்தியாவிற்காக எத்தனை உயிர்களை இழந்து, உதிரத்தால்தான் தேச எல்லை பிரிக்கபட்டிருக்கிறது என்பதை உணரும்போது சோகம் மேலிடுகிறது. “உதிரத்தால் ஒரு கோடு” வெறும் புத்தகம் மட்டுமல்ல; நம் ரத்தத்தை உறைய வைக்கிற ஒரு வரலாற்று சாசனம்.

ஆன்லைனில் புத்தகம் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-038-2.html

போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97

April 3rd, 2012

வலைவிரிக்கும் இந்துத்துவம்

978-81-8493-393-2_b

வலைவிரிக்கும் இந்துத்துவம்

பத்ரி நாராயண் திவாரி – தமிழில்:  சரவணன்
கிழக்கு பதிப்பகம் – விலை ரூ.125
Dial For Books 94459 01234, 9445 97 97 97

கடந்தகால உணர்வுகளின் அடிப்படையில் சமூகங்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் முயற்சியை, அரசியல் கட்சிகளும் சில அமைப்புகளும் வெற்றிகரமாக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுதிக்கொள்கின்றன. இந்தச் சமூகங்களும், அரசியல் ரீதியான சலுகைகளையும் அதிகாரங்களையும் பெறத் தங்களது வாக்களிக்கும் சக்தியைப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள், தங்களின் அரசியல் பலத்தை அதிகரிக்க சமூகங்களின் பலத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றன.

இந்துத்வா கோட்பாட்டை நம்பி அரசியல் புரியும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளை பலப்படுத்த எவ்வாறெல்லாம் முயற்சிக்கிறது என்று இப்புத்தகம் மிக விலாவாரியாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் பத்ரி நாராயண் திவாரி [வட நாட்டை சேர்ந்தவர்] ஒரு சமூக ஆர்வலர். இப்புத்தகம் இந்துத்துவத்தைப் பற்றி எழுதபட்ட ஒன்றாக இருந்தாலும், தலித்துகளுக்காக எழுதப்பட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது. வரலாறு, அரசியல், மானுடவியல், தலித்தியம், இந்துத்துவம், சாதி அரசியல், இந்திய கலாச்சாரம் எனப் பல விஷயங்களை அலசி ஆராய்கிறது. இப்புத்தகத்தை தமிழில் சரவணன் மொழிபெயர்த்துள்ளார்.

இப்புத்தகம் தேசிய அரசியலை மையமாக அதுவும் உத்திரப்பிரதேச மாநிலத்தை மையமாக கொண்டுள்ளது. முக்கியமாக பா ஜ க, வி ஹச் பி, ஆர் எஸ் எஸ் போன்ற அரசியல் கட்சிகளின் நோக்கங்களும், வியூகங்களும், பகுஜன் சமாஜ் கட்சியின் போராட்டங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன. நடத்து முடிந்த உத்திரப்பிரதேச தேர்தல் 2012 முடிவுகளை ஆராய்வதற்கு இப்புத்தகம் மிகவும் கை கொடுக்கும்.

இந்துக்களின் பல்வேறு நிலைப்பாட்டை எடுத்துரைப்பதால் இப்புத்தகத்தில் நிறைய பழங்கால கிராமியக் கதைகள் சொல்லப்படுகின்றன. லால் முனி சிரியா எனும் பறவையின் கதையோடு தொடங்குகிறார் நூலாசிரியர். அப்பொழுதே இப்புத்தகத்தில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மெல்லிய கோடிட்டு காட்டிவிடுகிறார்.

புத்தகம் முழுவதும் ராமாயணக் கதைகள் பரவியிருக்கிறன. அநேகமாக அவர் ராமாயணத்தை உதாரணமாக எடுத்து கொள்கிறார். ஆனால் நாம் இதுவரை கேட்டிராத, படித்திராத, பார்த்திராத கோணத்தில். ” சீதையை மீட்கும் போரில் அயோத்தியின் உதவி இல்லாமல், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமன் மற்றும் வானர சேனையுடன் [அதாவது தாழ்த்தப்பட்ட இன மக்கள்] போரிட்டு சீதையை ராமர் மீட்டார். சீதையை மீட்க உதவி செய்தவர்களை ராமர் தனது நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். அதனால்தான் அனுமனை ராமர் எப்போதும் தன்னோடு வைத்துக்கொண்டார். இதில், தாழ்த்தப்பட்ட மக்களின் சின்னம்தான் அனுமன். ”

ஒரு போர் வீரனை உருவாக்குதல் என்ற அத்யாயத்தில் சுஹால் தேவ் பற்றிய முழு விரிவான வாழ்கை வரலாற்றை தொகுத்துள்ளார் ஆசிரியர். பாசி சமுதாய மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு தூண்டி விடப்படுகின்றனர் என்று விளக்குகிறார்.

அந்தக்கால கதைகள், பழமொழிகள் ஆகியவை இப்புத்தகத்தில் உள்ள புதுமைகள். நிறைய விஷயங்கள் சாதாரண மனிதரும் மிக எளிமையாகப் புரிந்துகொள்ளும்படியாக எழுதப்பட்டுள்ளது இந்நூல்.

இந்துக்களுக்கும் இந்துக்கள் அல்லாதவர்களுக்குமான போராட்டங்களை மட்டுமே பார்த்து, கேட்டு, படித்த நமக்கு இப்புத்தகம் கொஞ்சம் வித்யாசமானது. இப்புத்தகம் இரண்டு இந்து சாதியினரிடையே நடக்கும் போராட்டம். ஆம் மேல் சாதி அரசியலும் தாழ்த்தப்பட்ட சாதி அரசியலும். தலித்துகளை கவர பா ஜ கா போன்ற இந்து கட்சிகளின் தந்திர வியூகங்களும், அரசியல் சாணக்கிய முயற்சிகளும் பல கோணங்களில் அலசப்பட்டுள்ளன.

ராமராஜ்ஜியம் என்று சொல்லிக்கொண்டு கட்சி வளர்த்து அரசியல் செய்யும் பா ஜ கா விடம் இருந்து எப்படி பகுஜன் சமாஜ் கட்சி வேறுபட்டு போராடுகிறது என்பது தெளிவாக விளக்கப்படுகிறது. பா ஜ க மேல்மட்ட சாதிகட்சி என்றும் பி எஸ் பி தலித்களின் அடையாளம் என்றும் எவ்வாறு உருப்பெற்றன என்பதைத் தெரிந்து கொள்ளமுடிகிறது.

புராணப் போர் எனும் தலைப்பில், புராணக் கதைகளையும் கலாசார ஆதாரங்களையும் பயன்படுத்தி பாரதீய ஜனதா கட்சி, நிஷாத் சமூகத்தை ஈர்க்க எவ்வாறு முயற்சித்தது என்பதை ஆராய்கிறார் ஆசிரியர். முஷாகர் இனம் தோன்றிய மகாபாரதக் கதை மிகவும் சுவரஸ்யம். சபரி, தீன – பத்ரி ஆகியோரின் கதைகள் நமக்கு பிரமிப்பாக இருக்கிறன.

உத்திர பிரதேச மாநில அரசியல் களத்தை ஆய்வு செய்யும் எல்லாருக்கும் இப்புத்தகம் ஒரு வரப்ரசாதம். ஆனால் முக்கிய கட்சிகளாக கருதப்படும் பா ஜ கா மற்றும் மகுஜன் சமாஜ் கட்சியைப் பற்றி மட்டுமே ஆராயபட்டிருப்பது ஒரு சிறிய குறை. 2012 தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சியைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இப்புத்தகம் வெறும் அரசியல்வாதிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டும் உரியதல்ல. இந்திய நாட்டின் ஒவ்வொரு பிரசையும் படித்து புரிந்துகொள்ள வேண்டிய புத்தகம். ஒரு சில விஷயங்கள் மிகைப்படுத்தப்படுவது போலவும், தலித் மக்களின் கட்சியை சார்ந்து இருப்பது போலவும் தோன்றுகின்றன. தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் தேசிய சாதி அரசியல் பற்றி தெரிந்துகொள்ள இப்புத்தகம் உதவும்.

 

போன் மூலமாக வாங்க: 94459 01234, 9445 97 97 97

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-393-2.html

 

March 21st, 2012

வில்லாதி வில்லன்

978-81-8493-514-1_b
வில்லாதி வில்லன் – பாலா ஜெயராமன்

கிழக்கு பதிப்பகம் -  விலை ரூ.125

Dial For Books 94459 01234, 9445 97 97 97

 

பாலா ஜெயராமனின் “வில்லாதி வில்லன்” படித்தவுடன் வில்லன்களின் கொடூரம் நம்மைத் திகைக்க வைக்கிறது. அதுமட்டுமல்ல, சினிமாத்தனமான வில்லன் காரெக்டரும், கதைகளில் வரும் கதாபாத்திர வில்லன்களும் ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது. ஒன்றல்ல ரெண்டல்ல…! 24 வில்லாதி வில்லன்களைப் பற்றி விவரிக்கிறார். இவர்களின் செயல்களும், நடவடிக்கைகளும் இவர்களை இப்படி அழைப்பதுதான் பொருத்தம் என நினைக்கவைக்கிறது.

மூன்றாம் விளாட் – பழிவாங்கும் வெறி மட்டுமல்லாமல் எதிரிகளின் உக்திகளைப் பற்றிய அபார அறிவுடையவன். போயர்களை கழுவிலேற்றி அவர்கள் துடிதுடித்துச் சாவதை ரசிக்கும் அந்தக் கொடூரனை எதிர்கொள்ள திராணி இல்லாமல் போனது எதிரிகளுக்கு. நாவலின் கேரக்டருக்கு “டிராகுலா” என்ற இவனது பெயர் வைக்கப்பட்டுள்ளதே இவனது வில்லத்தனத்திற்கு சாட்சி.

ஹிட்லரின் அறிமுகமான யோசப் மெங்காலா – மனித மிருகங்களில் பிரபலமான டாக்டர். யூதர்களே இல்லாமல் செய்துவிடவேண்டும் என நினைத்த நாஜி பார்ட்டிக்காரன். நாஜிக்களின் மதவெறிக்கும், மனித குலத்துக்கு எதிராக அவர்கள் இழைத்த குற்றங்களுக்கும் இன்றுவரை சாட்சியாக உள்ளது இந்த மரணத்தூதனின் வாழ்க்கை எனக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

லிட்டன் – 1876 ல் ஏற்பட்ட பஞ்சம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அலட்சியம், சந்தை பொருளாதாரத்தின் கொடிய முகம் என இன்றுவரை இவரின் நடத்தை உலகுக்குப் பறைசாற்றப்படுகிறது. ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்துகொண்டே கிட்டத்தட்ட ஒருகோடி தென்னிந்திய உயிர்களின் சாவுக்குக் காரணமான இந்தியாவின் நீரோ இவர். 1970 – களில் கிமேர் ரூஜ் இயக்கம் மூலம் “பால் பாட் ” கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ஒரு தேசத்தையே தலைகீழாகப் புரட்டிப்போட்டது. அரைவேக்காட்டு சித்தாந்திகளின்
கையில் அதிகாரம் சிக்கினால் சமூகம் என்ன பாடுபடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது பால் பாட்டின் ஆட்சியும், கம்போடியாவின் நிலைமையும்.

ராபர்ட் ஈ லீ – தனது மாநிலத்தின் மீது வைத்திருந்த விசுவாசத்தால் அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்ற நினைத்தவர். உள்நாட்டுப்போரில் அடிமைமுறையைக் காப்பாற்றப் போராடிய லீயின் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்தால், இவரெல்லாம் வில்லனா எனத் தோன்றும். யாருக்காகப் போராடினார் எனப் பார்த்தால் அவரால் மானுட சமுதாயத்துக்கு எவ்வளவு பெரிய தீங்கு நேர்ந்திருக்கும் என்பது புரியும்.

சொலானா லோபெஸ் – தனது அதிதேசியவாதத்தாலும், போர், பஞ்சம், சாம்ராஜ்ஜியக் கனவாலும் பராகுவா நாட்டையே கூண்டோடு கைலாசம் அனுப்பப் பார்த்த சர்வாதிகாரி. டியாகோ டி லாண்டா – ஒரு நாகரிகத்தைக் காணாமல் போக வைக்க அவர்களின் மொழியினை முதலில் அழிக்க இலக்கணம் வகுத்து மாயன் நாகரிகத்தை ஒழித்து, மதமாற்றத்துக்கு வன்முறையைப் பயன்படுத்தினார். மத  நம்பிக்கையை அடிப்படையாக்க் கொண்டு பிற கலாசாரங்களை எடைபோடக் கூடாது என்பதற்கு லாண்டா ஓர் எடுத்துக்காட்டு.

காங்கோ நாட்டின் சர்வாதிகாரி மொபூட்டு, நாட்டைச் சுருட்டி முப்பது வருட காலமாகத் தன் பாக்கெட்டில் வைத்திருந்தவர். தனது பதவியைத் தக்கவைக்க அரசியல் எதிரிகளை ஒழித்து, ஊழல் பெருச்சாளியாக வாழ்ந்து காட்டினார். கிளமன்ஸ் வான் மிட்டர்னிக் – ஜனநாயகத்தின் எழுச்சியைத் தாமதப்படுத்தி, இறுக்கமான பழமைவாதத்தைப் புகுத்தி, அரசியலிலும் சமூகத்திலும் ஏற்படவேண்டிய மாற்றத்தைத் தடுத்து தான் ஒரு ராஜதந்திரி என நிருபித்ததாக ஆசிரியர் கூறுகிறார்.

ஜப்பானிய ராணுவத் தளபதி ஹிடேக்கி டோஜூ கொடூரச் சர்வாதிகார அரசியலாலும், பதவி ஆசையினாலும், அரசியல் ஆதாயத்துக்காக நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் கடுமையை கூட்டியதாலும் நாட்டயே ஆபத்தில் தத்தளிக்க வைத்தவர். செசில் ரோட்ஸ் - வியாபர நோக்குக்காக அரசின் கொள்கைகளை வளைத்து, பெரும் நாட்டையே வளைத்துப் போட்ட பிரிட்டிஷ் பேரினவாதி. தற்கால ஆப்பிரிக்கா ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ரோட்ஸின் கடைந்தெடுத்த ஏகாதிபத்தியத்தின் விளைவுதான் இது எனக் குறிப்பிடுகிறார்.

வார்த்தைகளாலும், தனது செயலாலும் பகையை வளர்த்து ஜெர்மனிக்கு எதிரிகளை உருவாக்கியதில் பெரும்பங்கு, பொறுமையும், விவேகமும் இல்லாத இரண்டாம் வில்லியம்யே சாரும். முதல் உலகப் போரில் ஜெர்மனியின் அழிவிற்கு பெரும் காரணமானவர். செங்கிஸ்கான் – பல லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து அவர்களின் சடலங்களின் மீதே மங்கோல் பேரரசு உருவாக்க் காரணமானவர். மங்கோல் என்றால் காட்டுமிராண்டி என்று பொருள் ஏற்படுமளவு அட்டூழியங்களை நிகழ்த்தியவர். ரத்த சரித்திரத்தை ஏற்படுத்திய பேரரசன் என ஆசிரியர் கூறுகிறார்.

சொற்ப கம்யுனிச நாடுகளில் ஒன்றான வடகொரியாவை, கொடுமைக்காரத் தந்தையும் பிள்ளைகளுமாக தன் நாட்டு மக்களை இம்சித்த சம்பவம் அறுபது ஆண்டுகளுக்கு மேலான சாபக்கேடாக இருக்கிறது. கிம் இல் – சங் – இவரின் ஜூச்சே கொள்கை வடகொரியாவை நாசப்படுத்தியது. இன்றும் கிம் குடும்பத்திலிருந்து வடகொரியாவுக்கு ஒரு விமோசனம் கிடைக்கவில்லை என ஆசிரியர் வருந்துகிறார்.

மக்களில் ஒருவனாக இருந்து, கொடுமைகளை நேரடியாக அனுபவித்து அவற்றை தடுத்து நிறுத்த ஒரு புரட்சியை உருவாக்கி, ஜெயித்த பின்னர் தானே கொடுங்கோலனாக மாறிய புரட்சிக்காரர்களில் ஒருவர்தான் ரோபெச்பியர். மித்ரிடேட்டிஸ் – தன் பலத்தையும் பலவீனத்தையும் உணர்ந்திராமல், எதிரிகளின் பலத்தையும் கணிக்காமல் வேண்டுமென்றே ரோமுடன் சண்டையை இழுத்துக்கொண்டதால் இவரின் நாடும் [போண்டஸ்]அழிந்ததாக்க் கூறுகிறார்.

ஸ்பானிய பேரரசு அமெரிக்காவை கொள்ளையடித்து சுத்தமாக அழிவை ஏற்படுத்தியதற்கு காரணமானவர்கள் கோர்ட்டேஷ், பிசாரோ என்ற வில்லன்கள்தான். இனப்படுகொலையை ஆதரித்து நிகழ்த்திய ஒட்டோமானிய சுல்தானகமே துருக்கியின் வீழ்ச்சிக்கு காரணம். ஒரு சமுதாயமே தன்னிடயே நடக்கும் பெரும் குற்றத்துக்குத் துணைபோய்விட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

17, 18 ம் நூற்றாண்டுகளில் கருந்தாடி எனப்படும் எட்வர்ட் டீச், கடற்கொள்ளையர்களின் தலைவனாக இருந்து கப்பல்களைக் கொள்ளையடித்து பல நாடுகளின் வர்த்தகத்தை அழிப்பது என, கடலில் ஒரு சாம்ராஜ்ஜியமே நடத்தினார். டூட்சி, ஹூட்சி இன மக்களின் இனப்படுகொலை, இனவெறி தணியாத நெருப்பாக அவர்களுக்குள் நடந்துகொண்டுதானிருக்கிறது என்கிறார் ஆசிரியர்.

ஜியா உல் ஹக் – மதத்தின் அடிப்படையில் நாட்டை உருவாக்கிவிட்டு, சரியான முறையில் மக்களாட்சியை உருவாக்காமல், பாகிஸ்தானை மோசமான பாதையில் இட்டுசென்ற சர்வாதிகாரி. ராபர்ட்கிளைவ்- இந்திய துணைக்கண்டம், ஆங்கிலேயர் வசமாவதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுபவர். லஞ்சக் கலாச்சாரத்தை கீழ்மட்டம் வரைக்கும் பரவ காரணமானவர். “புரோட்டோக்கால்ஸ் ஆப் சியான்” – யூத இனத்தின் மீது வீண்பழியை சுமத்தி உலகையே அவர்களை வெறுக்கச் செய்து பூண்டோடு அவர்களை அழிக்கத் தூண்டிய புத்தகம். வில்லனாக மாறிய இப்புத்தகம் எத்தனையோ துன்பங்களையும், பேரிடர்களையும், கொடுத்ததோடு ஒரு பெரும் இனஅழிப்பு நிகழக் காரணமானதாகவும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

வரலாற்றைக் கறுப்புப் பக்கங்களால் நிரப்பிய முக்கிய வில்லன்களின் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும், கொடூரங்களையும், மக்களின் பெயரால், நாட்டின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், கொள்கையின் பெயரால் இவர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அழிவுகளையும் நூலாசிரியர் விரிவாக எடுத்துரைத்து நம்மை திகைக்கவைக்கிறார். இத்தனைக்குப் பிறகும் இந்த வில்லாதி வில்லன்களின் பட்டியல் இன்றைய நவீன உலகில்கூடத் தொடர்வதுதான் நமக்கு வருத்தம் தரும் ஒன்று.

போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-514-1.html

March 15th, 2012

ஆறா வடு

aaravadu-194x300

ஆறா வடு – நாவல்- சயந்தன்
தமிழினி வெளியீடு- விலை: 120
Dial for books – 94459 01234 | 9445 97 97 97

ஆறாவடு (புனைவு)

ஒவ்வொரு நாளும் கண்ணுக்கு முன்னால் நடனமாடிக் கெக்கலி காட்டுகிற சாவை முறியடிப்பதற்கு வாழ்வையே விலையாகக் கொடுக்கும் கதை ஆறாவடு.

தொடர்ந்து போருக்கு மத்தியில் வாழும் புலி ஒருவன், சண்டையில் கால் இழந்ததால் அரசியல் பிரிவுக்கு அனுப்பப்படுகிறான். அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக விடப்பட்ட போர் இடைவெளியில் அவனுக்கு நேர்கிற காதல்… அதைத் தொடர்ந்து என்ன விலை கொடுத்தாவது வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிற அவனுடைய விருப்பம்…

துப்பாக்கி முனையில் ஈபிஆர்எல்எஃப் அழைத்தபோது அவர்களோடு நின்றவன், காலச்சக்கரம் சுற்றி வந்தபோது புலியாக உடன்படுகிறான்! ஒவ்வொரு கட்டத்திலும் அவன் பெறுகிற கருத்தேற்றங்கள், அவற்றுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு தன் இருப்பை நியாயப்படுத்திக்கொள்கிற அவனது முயற்சி…! தான் முடங்கிய பொறிக்குள்ளிருந்து வெளியேற முயல்வதும் பிழை விடுவதும் மீண்டும் முயல்வதும்…! வாழவேண்டும் என்பதுதான் முகாமையானது!

எல்லாவற்றையும்விட வாழ்வதைத்தான் அவன் அதிகம் விரும்பியிருக்கிறான்! நியாயம்தான்! தன்னுடைய விருப்பங்களுக்கெல்லாம் அடியாதாரமாக மின்னிக்கிடக்கிற வாழ்வாசை அவனை உந்துகிறது!

அவன் தப்பிச் செல்வதற்கு வரவேண்டிய காசெல்லாம் சிக்கலில்லாமல் வருகிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, சாவிலிருந்து விலகிச் செல்வதற்கு அவன் வைக்கவேண்டிய பணயம் ஒன்று இருக்கிறது-அது அவனது வாழ்வு! கடந்துபோனால் உன் வாழ்வு உனக்கு; அகப்பட்டுக்கொண்டால்…!

நிச்சயமின்மையிலிருந்து வெளியேறிப் புகல்தேட நினைக்கிற ஒருவன் தேடிய புகலிடமும் நிச்சயமின்மைதான்!

வாழ்விலும் சாவிலுமான நிச்சயமின்மைகளின் இடைவெளிகளை நயமாக இட்டுநிரப்புகிறது ஆறாவடு!

இந்த நல்ல புனைவை ஆர்வமுள்ளவர்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன்!

-கரு.ஆறுமுகத்தமிழன்

போன் மூலமாக புத்தகம் வாங்க:  94459 01234 | 9445 97 97 97

ஆன்லைனில் வாங்க:  https://www.nhm.in/shop/100-00-0000-192-7.html