Rs. 85
Dial For Books – 94459 01234 | 9445 97 97 97
ஜார்ஜ் ஆர்வெல் 1945 ம் ஆண்டு வெளியிட்ட நூல் இது. மேலோட்டமாக ஒரு பண்ணையைப் பற்றிய கதையாகத் தெரிந்தாலும் இது கம்யுனிச ரஷ்யா பற்றியது என்பது சுலபமாகப் புரிந்துவிடும். உலகிற்கே ஓர் உதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாலினின் ஆட்சியில் நடந்த படுகொலைகளும், போலீஸ் ராஜ்ஜியமும் உலகையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
ஓல்ட் மேஜர் என்கிற பன்றியினால் ஏற்றி வைக்கப்பட்ட புரட்சி என்கிற சிறு பொறி எப்படி பெரும் தழலாய் மாறி அந்தப் பண்ணையையே பற்றி ஏறிய வைக்கிறது என்பதை மிகத் தெளிவாக, அதே சமயம் சிறிதளவுகூட விறுவிறுப்பு குறையாமல் ஆசிரியர் கொண்டு செல்கிறார்.
ஸ்னோ பால் மற்றும் நெப்போலியன் என்கிற இரண்டு பன்றிகள் இடையே கதை வேகமாகப் பயணிக்கிறது. இவை தவிர எப்போதும் உழைத்துகொண்டேயிருக்கும் பாக்சர் மற்றும் கிளாவர் என்னும் குதிரைகள், எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக்கும் ஸ்க்விலர் என்கிற பன்றி, தன் அழகைப் பற்றியே நினைத்துகொண்டிருக்கும் மோலீ என்கிற பெண் குதிரை, மோசேஸ் என்கிற அண்டங் காக்கை என்று சுவாரசியமான, அர்த்தம் பொதிந்த கதா பாத்திரங்களும் உண்டு.
முதல் அத்தியாயத்தில் வரும் “இங்கிலாந்தின் விலங்கினமே” என்ற பாடல், நம்ம ஊர் பாலசந்தர் படத்தின் அருவி, டெலிபோன் போல ஒரு கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறது. சூழ்நிலைக்கேற்ப அது பாடப்படும்போது நமக்கும் அந்தச் சூழ்நிலை சரியாகப்புரிந்து விடுகிறது. விலங்குகளால் பண்ணை துவங்கப்பட்டு, அது வெற்றிகரமாக நடந்து, அதனைச் சரியான ஊடகங்கள் மூலம் வெளியுலகத்திற்குத் தெரியவைத்து, அண்டை வீட்டாரோடு தொடர்பு, வியாபாரம் மற்றும் சண்டை என எல்லாவற்றயும் தொட்டு விடுகிறார் ஆசிரியர்.
விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நடக்கும் சண்டை ஒரு பெரும் யுத்தம் போலவே நடக்கிறது. படிக்கும் நாமும் அதனுள்ளே பொய் விடுகிறோம். நம்மீதும் ரத்தம் தெறிக்கிறது. மிருகங்கள் வெற்றி பெறும்போது நம்மை அறியாமல் நாமும் அந்த பச்சைக் கொடிக்கு வணக்கம் செலுத்துகிறோம். ஆசிரியரின் கதை சொல்லும் திறமைக்கு சான்றான காட்சி அது.
1945 ல் வெளிவந்த நாவல் என்பதை சில நேரங்களில் நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு தற்போதய நடைமுறை மற்றும் சமுதாய அறிவுடன் இது எழுதப்பட்டிருக்கிறது. அதே போல கையில் எடுத்தவுடன் ஒரே மூச்சில் படித்துமுடித்துவிடவேண்டும் என்கிற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தும் வகையில் விறுவிறுப்பாக மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
நெப்போலியன் எப்படி ஒரு தலைவனாக, பின்னர் சர்வாதிகாரியாக மாறுகிறது என்பதை மிக நேர்த்தியாக சின்ன சின்ன விஷயங்கள் மூலம் அழகாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஒரு பயங்கரமான விஷயம்கூட சரியான முறையில், உணர்வுகளோடு தெரிவிக்கப்படுமானால் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்கிற பெரிய விஷயத்தை மிக எளிமையாய் புரியவைத்து விடுகிறார்.
எல்லா பயங்கர விஷயங்களுக்கும் உச்சகட்டமாய் பாக்சர் குதிரைக்கு ஏற்படும் முடிவு ஐஸ் கத்தியாய் அடிவயிற்றில் இறங்குகிறது. காற்றாலையைக் கட்ட மிருகங்களின் முயற்சி நமக்கு முல்லைப் பெரியாறு போராட்டத்தை நினைவுக்கு கொண்டு வரக்கூடும். தனக்குத்தானே பட்டங்கள் வழங்கிக்கொண்டு, பாராட்டு விழாவும் நடத்திகொள்ளும் நெப்போலியன் நம்மை நிகழ்கால அரசியலுக்கு இழுத்து வருகிறது. பன்றிகளும் மனிதர்களும் கைக்கோர்க்கும் அந்த காட்சி மிக அழகாக ஆசிரியரால் சித்தரிக்கப்படுகிறது. நாமும் பிரமிப்பு நீங்காமல் புத்தகத்தை மூடுகிறோம்.
ஆர்வெல்லின் கதையில் யார் ஸ்டாலின், கம்யுனிச அதிகாரவர்க்கம் எப்படி இயங்கியது, கீழ்த்தட்டு மக்களுக்கு முடிந்தவரையில் கல்வி அறிவோ, உலக அறிவோ கிடைத்திடாமல் வைத்துக்கொள்வது, அவர்களுக்குத் தேவையான செய்திகளை எப்படி தாங்களே அழகாகப் புனைந்து சொல்வது, மேலும் யார் பதவிக்கு வந்தாலும் உழைக்கும் வர்க்கம் எப்படி மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுகிறாகள் என்பதைத் தெளிவாகப் புரியவைக்கிறார். வெளிவந்து பல ஆண்டுகள் ஆனாலும் ஸ்டாலினின் ஆட்சி பற்றிய அரசியல் வரலாறு போலவே இன்றும் இருப்பது இதன் சிறப்பு.
மூலத்தின் சுவையும், பொருளும் கெடாமல் தமிழாக்கம் செய்த விதத்திற்கு பி.வி. ராமஸ்வாமியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இது அவரது கன்னி முயற்சி என்று தெரியவரும்போது ஆச்சரியமும் நம்பிக்கையும் ஏற்படுகிறது. இது போன்ற புதினங்கள் தமிழுக்கு நிச்சயம் தேவை.
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-521-9.html

